நாளை முதல் நடுவண் அரசு அலுவலகங்களுக்கு பூட்டு போடும் போராட்டம் - தமிழீழத்திற்கான மாணவர் போராட்டக்குழு அறிவிப்பு!
26 03 2013
நடுவண் அரசின் செயல்பாட்டை முடக்கும் விதமாக நாளை முதல் தமிழகம் முழுவதும் மத்திய அரசு அலுவலகங்களுக்கு பூட்டு போடும் போராட்டம் நடத்தப் போவதாக, தமிழீழத்திற்கான மாணவர் போராட்டக்குழு தெரிவித்துள்ளது. இந்தக் குழுவின் சார்பில் மாணவி திவ்யா, இளையராஜா ஆகியோர் இன்று சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது-
எங்கள் போராட்டத்தின் அடுத்த கட்டமாக நாளை முதல் நடுவண் அரசின் செயல்பாட்டை முடக்கும் விதமாக தமிழகம் முழுவதும் மத்திய அரசு அலுவலகங்களுக்கு பூட்டு போடும் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள அகில இந்திய வானொலி நிலையத்தை முற்றுகையிட்டு பூட்டு போடுவோம். அதே நேரத்தில் அனைத்து மாவட்டங்களிலும் மத்திய அரசு அலுவலகங்களுக்கு பூட்டு போடும் போராட்டத்தில் மாணவர்கள் ஈடுபடுவார்கள்.
வருகிற 31-ந்தேதி போராட்ட விளக்க கருத்தரங்கம் நடைபெற உள்ளது. எங்களை பொறுத்தவரை அமெரிக்காவோ, ஐ.நா.வோ முதன்மை இல்லை. இந்திய அரசின் நிலைப்பாட்டை மாற்ற வேண்டும் என்பது தான் எங்கள் கோரிக்கை. இலங்கையில் தமிழீழம் அமைவதற்கும், அதற்காக பொது வாக்கெடுப்பு நடத்துவதற்கும் இந்தியா தீர்மானத்தை முன் எடுத்து சென்று வலியுறுத்த வேண்டும். இலங்கை பிரச்சினை மட்டுமல்லாமல் முல்லை பெரியாறு, காவிரி பிரச்சினை, தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது போன்ற பிரச்சினைகளில் நடுவண் அரசு பாராமுகமாக இருக்கிறது.
தமிழர்களின் பிரச்சினை தனித்த பிரச்சினையாக பார்க்கப்படுகிறது. இதே போக்கு தொடர்ந்தால் தனி தமிழ்நாடு என்ற கோரிக்கையும் எழலாம். அதை தவிர்க்க முடியாது. எங்கள் போராட்ட அமைப்பில் 38 கல்லூரிகளைச் சேர்ந்த 66 பிரதிநிதிகள் இருக்கிறார்கள். அவர்கள் பல கட்சிகளையும் சேர்ந்தவர்கள்தான். ஆனால் ஈழத்துக்காக ஒரே அடையாளத்துடன் திரண்டுள்ளோம். எங்கள் போராட்டத்தை ஒடுக்குவதற்காக கல்லூரிகளை மூடியதை கண்டிக்கிறோம். கல்லூரிகளை உடனடியாக திறக்க வேண்டும். படிப்புக்கும், கல்லூரிக்கும் இடையூறு இல்லாத வகையில் எங்கள் போராட்டத்தை தொடருவோம்.
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் இலங்கை வீரர்கள் பங்கேற்றால் விளையாட்டு மைதானத்தை முற்றுகையிடுவோம். நடுவண் அரசு அலுவலக பெயர் பலகைகளில் மத்திய மற்றும் இந்திய என்ற எழுத்துக்களை தார்பூசி அழிப்போம். வருகிற பாராளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபடுவோம். தேசிய கட்சிகளை ஆதரிக்க மாட்டோம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
நன்றி தமிழ் இணையங்கள்
..........................................................
சென்னையில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற 300 மாணவர்கள் கைது
18 03 2013
ஈழத் தமிழர்களை இனப்படுகொலை செய்த இலங்கை அரசு மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற 300 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
அப்போது போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பதற்றம் நிலவியது.
இலங்கை தமிழர் பிரச்சினை
ஈழத் தமிழர்களை இனப்படுகொலை செய்த இலங்கை அரசு மீது பொருளாதார தடை விதிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். இலங்கையில் தனி ஈழம் அமைய பொதுவாக்கெடுப்பு நடத்த ஐ.நா.சபை முன்வர வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை கிண்டியிலுள்ள ஆளுநர் மாளிகையை முற்றுகையிடப் போவதாக தமிழீழத்திற்கான மாணவர் போராட்டக்குழுவினர் அறிவித்து இருந்தனர்.
அதன்படி, ஆளுநர் மாளிகையை முற்றுகையிடுவதற்காக நேற்று காலை 9 மணிமுதல் டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரி மாணவ–மாணவிகள், நந்தனம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள், வேல்ஸ் பல்கலைக்கழக மாணவர்கள், மாதா, சாஸ்தா பொறியியல் கல்லூரி மாணவர்கள், செங்கல்பட்டு அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள் உள்பட பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த 300 மாணவ–மாணவிகள் சைதாப்பேட்டை நீதிமன்றம் அருகில் குவிந்தனர்.
கண்டன ஆர்ப்பாட்டம்
அங்கு குவிந்த 15 மாணவிகள் உள்பட 300 மாணவர்கள் தங்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இலங்கை போரில் படுகொலை செய்யப்பட்ட ஈழத் தமிழர்களின் உருவபடம், இலங்கை ராணுவத்தால் கொடூரமான முறையில் சுட்டுக்கொல்லப்பட்ட விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் இளைய மகன் பாலச்சந்திரன் உருவபடம், இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு எதிராக கண்டன வாசகங்கள் அடங்கிய பதாகைகள், தங்களுடைய கோரிக்கைகள் அடங்கிய பதாகைகள் போன்றவற்றை தங்கள் கைகளில் ஏந்தி இலங்கை அரசிற்கு எதிராகவும், மத்திய அரசிற்கும் எதிராகவும் கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஒரு சில மாணவர்களும், பொதுமக்கள் சிலரும் இலங்கை அதிபர் ராஜபக்சே உருவப்படத்தை செருப்பால் அடித்தும், கால்களால் மிதித்தும் தங்களுடைய எதிர்ப்பினை வெளிப்படுத்தினார்கள்.
போராட்டம் தொடரும்
ஆர்ப்பாட்டத்தின்போது தமிழீழத்திற்கான மாணவர் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் சென்னை சட்டக்கல்லூரி 3–ம் ஆண்டு மாணவி திவ்யா நிருபர்களிடம் கூறியவதாவது:–
இலங்கையில் தனி ஈழம் அமைய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 23 கல்லூரிகளை சேர்ந்த மாணவ–மாணவிகள் இந்த போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளோம்.
இலங்கையில் தனி ஈழம் அமையும் வரை எங்களுடைய போராட்டம் ஓயாது. மாணவர்களின் போராட்டங்களை முடக்கும் வகையில் தமிழக அரசு கல்லூரிகளை கால வரம்பின்றி முடி உள்ளது. கல்லூரிகளை மூடினாலும் எங்களுடைய போராட்டத்தை நாங்கள் கைவிட்டுவிடவில்லை. எனவே தமிழக அரசு தனது உத்தரவை வாபஸ் பெற்று கல்லூரிகளை உடனடியாக திறக்க வேண்டும். இல்லையென்றால் மாணவர்களின் போராட்டம் மேலும் தீவிரமடையும். எங்களுடைய அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து விரைவில் அறிவிப்போம்.
இவ்வாறு திவ்யா கூறினார்.
போலீசாருடன் தள்ளுமுள்ளு
சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் சாலையில் அமர்ந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட மாணவர்கள், 11.45 மணியளவில் கவர்னர் மாளிகையை முற்றுகையிட ஊர்வலமாக புறப்பட முற்பட்டனர்.
ஆனால் கவர்னர் மாளிகை அருகில் மாணவர்கள் சென்றுவிடாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கவர்னர் மாளிகைக்கு ஒரு கிலோ தூரத்திற்கு முன்பே போலீசார் தடுப்பு வேலிகளை அமைத்திருந்தனர். போலீஸ் இணை கமிஷனர் திருஞானம் தலைமையில் துணை கமிஷனர் சுதாகர், 10–க்கும் மேற்பட்ட போலீஸ் உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள் உள்பட 100–க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
மாணவர்கள் போலீசாரின் தடுப்பு வேலிகளை தாண்டி கவர்னர் மாளிகைக்கு செல்ல முற்பட்டனர். அப்போது போலீசாருக்கும், மாணவர்களுக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
300 மாணவர்கள் கைது
இதற்கிடைய ஒரு சில மாணவர்களை போலீசார் இழுத்து சென்று போலீஸ் வேனில் ஏற்றினார்கள். இதனால் அங்கு சிறிது நேரம் பதற்றமான சூழ்நிலை நிலவியது.
அதைத்தொடர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்ற மாணவர்கள் தாங்களாகவே கைதாவதாக கூறி போலீஸ் வேனில் ஏறினார்கள். கைது செய்யப்பட்ட 15 மாணவிகள் உள்பட 300 மாணவர்களும் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு தங்க வைக்கப்பட்ட மாணவ–மாணவிகள் 300 பேரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
மாணவர்கள் போராட்டம் காரணமாக நேற்று காலை 10.30 மணி முதல் 12 மணி வரை சைதாப்பேட்டை நீதிமன்றம் வழியாக கிண்டி கவர்னர் மாளிகை செல்லும் சாலையில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நன்றி தமிழ் இணையங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக